Thursday 20 April 2017

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுப்பதன் மூலம் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதிக்கிறார்  .தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாயக் கடன்களை ரத்துச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியும் தமிழக விவசாயிகள் குழுவினர் புதுதில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. ஒவ்வொரு நாளும் புதிய வடிவங்களில் அவர்கள் நடத்தும் போராட்டம் ஊடகங்களின் கவனத்தையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்தாலும், இதுவரையில் இவர்களோடு பேச பிரதமர் முன்வரவில்லை. இந்நிலையில் 37வது நாளாக, ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் சட்டைகளைக் கிழித்துக்கொள்ளும் போராட்டம் நடத்தினர்.  விவசாயிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை, ஏற்கத்தக்கவை. கார்ப்பரேட்டுகளுக்கு சென்ற ஆண்டு மட்டும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் விவசாயிகளின் அரசு வங்கிக் கடன்களை ரத்துச் செய்ய முடியாதுவெளிநாடுகளுக்குப் பறந்து போகிற இடங்களில் சந்திக்கிறவர்களோடு செல்ஃபி படம் எடுத்துக்கொண்டு பதிவிடுகிற பிரதமரால் தலைநகரிலேயே போராடிக்கொண்டிருக்கிற தமிழக விவசாயிகளைச் சந்திக்க வரமுடியவில்லை. இதன் மூலம் விவசாயிகளை அவர் அவமதிக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையிலேயே, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. உறுதியான, ஒன்றுபட்ட போராட்டமே இந்த அரசை அசையச் செய்யும். 

தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 0930 மணி அளவில்  BSNLEU, NFTE, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment